மிதக்கும் உலகம்



அதிகாலையில் ஒரு ரவுண்டானா

-சபரிநாதன்


கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்

ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை

எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு

காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிட முடியாதது

திடீரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.

அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது

மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க

இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்

தாவா ஏதுமின்றித் தத்தமது வழியில் போகின்றன.

சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?

                                 * * *

இக்கவிதையை வாசித்தவுடன் "இதில் என்ன இருக்கிறது?" என்று ஒருவர் சொல்லக்கூடும். ஏனெனில் சில தசாப்தங்களாக நாம் சற்று பொறுப்பான முறையில் "எப்போதும் பெரிதாக எதிர்பார்ப்பவர்களாக" நுகர்வு கலாச்சாரத்தால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகவே ஒவ்வொருமுறையும் கவிதையில் ஏதாவது நடக்கவேண்டும் என்றும் உலகை மாற்றுவதற்கு அது உதவ வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். கவிதைக்குக் கவசத்தையும் கேடயத்தையும் கொடுத்து ஏதாவது செய்யும் என விழிவிரியப் பார்க்கிறோம். பிறகு, கவிதை நம் சொல்பேச்சு கேட்பதில்லை என்பதையும் கவிதை கவிதையின் சொல்பேச்சை மட்டுமே கேட்கிறது என்பதையும் மெதுவாக உணர ஆரம்பிக்கிறோம். அப்படியெனில் கவிதைக்கு நம் மீது அக்கறையே இல்லையோ என்றும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. 


கவிதையும் சில காரியங்களைச் செய்கிறதுதான். நவீன உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அடிப்படையான சிக்கலுக்கும் கவிதை ஏதோவொரு மூலையிலிருந்து தன்னால் மட்டுமே அளிக்கப்படக்கூடிய ஒரு பதிலை காலங்காலமாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை நேரடியான முறையில் அமைந்தவை அல்ல என்பதுதான் வித்தியாசம். ஒரு யுத்தம் நடக்கும்போது எங்கோ குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருக்கும் ஒரு போர்வீரனைப் பற்றிக் கவிதை பேச ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து, "அன்றைய அற்புதக் காட்சியாய் சாலை நடுவே முளைத்து நின்றது ஒரு புல்" என்கிறது.


சபரிநாதனின் இக்கவிதையும், ஒரு “முக்கியமான” பதிலை, ஒன்றுக்கும் பெறுமானமில்லாத ஒரு தருணத்தை வைத்துச் சாவகாசமாகச் சொல்கிறது. அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது ஒரு எருமை மாடு. தாவா ஏதுமின்றித் தத்தமது வழியில் போகின்றன வாகனங்கள். ஒரு ஆம்புலன்ஸ்கூட செல்லவில்லை. துயரம்தான். உலகியலின் இரைச்சல் மிகுந்த தருணங்களுக்கு என்ன குறை? இனிப்பை மொய்க்கும் எறும்புகள் போல நாம் அவற்றை மொய்த்துக்கிடக்கிறோம், ஆனால் மருந்துக்குக் கூட நினைத்துப்பார்க்கப்படாத, முக்கியமற்றதும் உபயோகமற்றதுமான விஷயங்களுக்கும் தருணங்களுக்கும் யார் இருக்கிறார்கள், கவிஞர்களையும் குழந்தைகளையும் பைத்தியக்காரர்களையும் விட்டால்? கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் இருக்கிறது என்று தேவதச்சன் ஒரு நேர்காணலில் சொல்கிறார்.


யோசித்துப் பாருங்கள். கவிதைதான், கற்பனையினூடே, ஓர் அனுபவத்தில் உள்ள புதிய சாத்தியத்தை அழகை உண்மையைத் திறக்கிறது. அதுதான் நம் அனுபவங்களை மட்டுமின்றி அசேதனங்களின் அனுபவங்களையும் கூட நிரந்தரப்படுத்துகிறது. அழகின் அணுக்கமா? அழகின் கொடிதான் உயரப்பறக்கிறது அங்கே. உண்மையின் கதகதப்பா? கவிதையைப் போல நம்மைப் பற்றிய உண்மையை இடையறாது சொல்லிக்கொண்டிருந்தவர்கள் குறைவு. ஒரேயொரு மனிதன் உதிரும் அளவுக்கு ஒரேயொரு இலை உதிர்வதும் முக்கியம் என்று நம்பும் வெள்ளந்தி. வாழ்க்கைக்கு முன்பாகவே எதிர்காலத்தைச் சீக்கிரம் எட்டிவிடுவதற்கான ஓர் உபகரணம். உலகியலுக்கு அப்பாலான, முக்கியத்துவமற்ற எளிய தருணங்களின் பாதுகாவலன். இப்படிக் கவிதைக்குத்தான் எத்தனை எத்தனை வேலைகள். ஒரு திகைப்பூட்டக்கூடியவிஷயம்: இவ்வளவும் கவிதை தனக்குத்தானே அளித்துக்கொண்ட பணிகள் மட்டுமே.


சபரியின் இக்கவிதைக்குள் அப்படி என்ன நடக்கிறது? முதலில், நோக்கமற்ற ஒரு தூய உலகம் சித்தரிக்கப்படுகிறது. அப்புறம், நோக்கம் நீங்கிவிட்டால் பாரம் நீங்கிவிடுவதை உணர ஆரம்பிக்கிறோம். பின்பு, ஒருவர் வியப்பு மேலிடக் கேட்கிறார்: "சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?"


பிறகு, மிதத்தலும் பறத்தலும்தான்.

*

Comments