பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா

 

Artist:  Alphonse Osbert

பொடிநடையாகக் கடற்கரையில்  

நடந்து கொண்டிருந்தேன்

ஆங்கே ஒரிடத்தில் 

எந்த அலைகளாலும் தொட முடியாதபடி 

மண்ணில் கிடக்கும்

ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன்.

எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை ?

யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது?

மொத்தச் சமுத்திரமும்

அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளும்

ஆழ்கடல் சீவராசிகளும்

யாவும் யாவும்

அந்த ஒற்றை ரோஜாவை 

அழைத்துக்கொண்டிருக்க

அதுவோ 

பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது 
கடல் பார்த்துத் தனித்திருக்கும் யுவதி என.

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம் 

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

*

Comments

Post a Comment