செஸ்லா மிலோஸ் கவிதைகள்

Artist: Andrew Wyeth


1.மறதி



நீங்கள் பிறருக்கு செய்த துன்பங்களை மறந்துவிடுங்கள்

பிறர் உங்களுக்குச் செய்த துன்பங்களையும் மறந்துவிடுங்கள்

தண்ணீர் ஓடுகிறது ஓடிக்கொண்டேயிருக்கிறது

வசந்தம் பிரகாசிக்கிறது மேலும் முடிந்தும்விடுகிறது

நீங்கள் மறந்துவிட்ட பூமியின் மேல் நீங்கள் நடக்கிறீர்கள்

தூரத்திலிருந்து சிலசமயங்களில் ஒரு பல்லவியைச் செவியுறுகிறீர்கள்

அதற்கு என்ன அர்த்தம் என்றும்

யார் அங்கு பாடுகிறார்கள் என்றும் கேட்கிறீர்கள்

ஒரு குழந்தையைப் போன்ற சூரியன் வெதுவெதுப்பாய் வளர்கிறது 

பேரனும் கொள்ளுப் பேரனும் பிறக்கிறார்கள்

நீங்கள் மீண்டும் கையைப் பிடித்துச் அழைத்துச்செல்லப்படுகிறீர்கள் 

நதிகளின் பெயர்கள் உங்களுக்குள்ளேயே எஞ்சிவிடுகின்றன

இந்த நதிகள் முடிவற்றதாகத் தோன்றுவது எங்ஙனம்

உங்கள் வயல்வெளிகள் தரிசாகக் கிடக்கின்றன

அப்போதிருந்தது போல தோன்றவில்லை நகரக்கோபுரங்கள்

வாசற்படியில் நீங்கள் ஊமையாய் நிற்கிறீர்கள்

**


2.எதிர்பாராத சந்திப்பு


விடியலில் உறைந்த வயல்வெளிகளினூடாகப் பாரவண்டியில் 

சவாரி செய்தோம்.

சிவப்பு சிறகொன்று எழுந்தது இருளில்.

சாலையின் குறுக்கே திடுமென ஓடியது ஒரு முயல்.

எங்களில் ஒருவர் தம் கரங்களால்
அதைச் சுட்டிக்காட்டினார்.

இவை சிலகாலங்களுக்கு முன்பு.

இன்று யாரும் உயிரோடு இல்லை.

அந்த முயலும் இல்லை, சைகை காட்டிய மனிதனும் இல்லை.

ஓ என் அன்பே , அவை எங்கே,

எங்கே போயின

ஒரு கையின் மினுக்கமும் அசைவின் கீற்றும் கூழாங்கற்களின் சலசலப்பும்.

நான் இதைத் துயரத்தின் பொருட்டுக் கேட்கவில்லை

ஆனால் வியப்பில் கேட்கிறேன்

**