சில மொழிபெயர்ப்பு கவிதைகள்-2


Artist: Jagdish Swaminathan


1.கண்களும் காதுகளும்


மலை மலையே
நதி நதியே
பார்க்கப்படக்கூடிய நதியை காணமுடியாது
கேட்கப்படக்கூடிய நதியை செவியுறமுடியாது
எது பார்க்கப்படுகிறதோ அது நிழல் மாத்திரமே
எது கேட்கப்படுகிறதோ அது எதிரொலி மாத்திரமே
மலைக்கு அப்பால் காண்பது பார்க்கயியலாத கண்களால் பார்க்கயியலாததைப் பார்ப்பது
நதியை கேட்பது கேட்கயியலாத காதுகளால் கேட்கயியலாததைக் கேட்பது
மலை மலையல்ல
நதி நதியல்ல
ஒரு தேவாலயத்தைக் காணமுடிகிற கிராமத்திலோ
மணிச்சப்தத்தைக் கேட்கமுடிகிற நாட்டுப்புறத்திலோ
சில முடிவற்ற தொலைவிடங்களிலும்
சில ஆழமான இடங்களிலும்
ஏதோவொன்று பார்க்கப்படுகிறது
ஒரு சப்தம் கேட்கப்படுகிறது
-பார்க் யென்-ஹூய் (தென்கொரியா)
                                     

**

2. துரோகம்


என் தந்தை எங்கள் வீட்டையும் கிராமத்தையும் நாட்டையும் பாதுகாக்கும்போது இறந்தார்.

நானும் சண்டையிட விரும்பினேன்.
ஆனால் நாங்கள் பெளத்தர்களாய் இருந்தோம்.
நாங்கள் அமைதியாகவும் வன்முறையற்றும் இருக்க வேண்டுமென்று மக்கள் சொல்கிறார்கள்.

ஆகவே நான் என் எதிரியை மன்னித்தேன்.

ஆனால் சிலசமயங்களில் நான் உணர்வதுண்டு
என் தந்தைக்குத் துரோகம் செய்வதாய்.
-டென்ஸின் ட்சுன்ட்யு

**


3.பிரியமற்றச்  சிட்டுக்குருவிகள்


எனது காலி முற்றத்தில் வந்திறங்குகின்றன நூறாயிரம் சிட்டுக்குருவிகள்.


சில சிட்டுகள் ப்ளம் மரத்தின் மீதமர்ந்து,

தெளிந்த மாலை வானத்தோடு அரட்டையடிக்கின்றன,


மீதிக் கூட்டமோ தங்களது சப்தத்தினால் என்னைக் கொல்லப் பார்க்கின்றன.


திடீரென அவை யாவும் திடுக்கிட்டுக் கலைய, அமைதி சூழ்கிறது:

சிறு சப்தம்கூட இல்லை

- யாங் வான்-லி



4.பேராசிரியர்


என்னைத் தெரிகிறதா?
நான் பேராசிரியர் சேத்.
முன்பு உனக்குப் புவியியல் பாடமெடுத்தேன்.
இப்போது ஓய்விலிருக்கிறேன், ஆரோக்கியமே என்றாலும்.
என் மனைவி சிலவருஷங்களுக்கு முன்பு மரித்துப்போனாள்.
கடவுளின் கருணையால் என் குழந்தைகள் அனைவரும் வாழ்க்கையில் செளகர்யமாக உள்ளனர்.
ஒருவன் விற்பனை மேலாளர் மற்றொருவன் வங்கி மேலாளர்,
இருவருமே கார் வைத்திருக்கிறார்கள்.
மற்றவர்களும் நன்றாக இருக்கிறார்கள்,
ஆனால் அவ்வளவு இல்லை.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு கருப்பு ஆட்டினை கொண்டிருக்கவேண்டும்.
சரளாவுக்கும் தரளாவுக்கும் கல்யாணமாகிவிட்டது,
அவர்களுடைய கணவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.
நீ நம்பமாட்டாய், எனக்குப் பதினோரு பேரப்பிள்ளைகள்.
உனக்கு எத்தனை? மூன்றா?
இந்நாட்கள் குடும்பக் கட்டுப்பாடுகளுக்கானவை.
நான் எதிர்க்கவில்லை.
நாம் காலத்தோடு ஒத்துப்போகவேண்டும்.
ஒட்டுமொத்த உலகமும் மாறிக்கொண்டிருக்கிறது,
இந்தியாவும் கூட.
நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நம் வளர்ச்சி வளர்ந்து கொண்டிருக்கிறது.
பழைய மதிப்பீடுகள் சென்று,
புதியது வந்துகொண்டிருக்கிறது.
சகலமும் இடைவெளிகளுடனும் வரம்புகளுடனும் நிகழ்கின்றது.
இப்போதோ அப்போதோ மாத்திரம் நான் வெளியே செல்கிறேன்,
இதுதான் முதுமையின் பரிசு.
வழக்கமான வாதைகளோ வலிகளோ இல்லை.
நீரிழிவோ ரத்தக்கொதிப்போ இதயப் பிரச்சினைகளோ கிடையாது.
இது இளவயதிலிருந்த சில பழக்கவழக்கங்களினால்.
உன் உடல் நலம் எப்படி?
நன்றாகத்தானே இருக்கிறது?
நான் அதற்காகச் சந்தோஷப்படுகிறேன்.
இந்த வருடம் எனக்கு அறுபத்தியொன்பது மேலும் சதமடித்துவிடுவேனென்று நம்புகிறேன்.
நீ முன்பு குச்சி போலயிருந்தாய்,
இப்போதோ நீ புதுச்செழிப்பின் எடையுள்ள மனிதன்.
அது ஒரு நல்ல நகைச்சுவை.
ஒருவேளை மீண்டும்
தற்செயலாக இந்தப்பக்கம் வந்தால்,
தயவுசெய்து என் பணிவான வீட்டிற்கும் வா.
நான் இங்குதான் எதிர்வீட்டின் பின்பக்கத்தில்
வசிக்கிறேன்.
-நிசீம் எசெக்கியேல் (இந்தியா)

**

பின்குறிப்புகள்:


1. பார்க் யென்-ஹூய் (1930-) தென்கொரியாவை சேர்ந்த கவிஞர், தத்துவத்தில் முனைவர் பட்டம் பயின்றவர். கிழக்கத்திய மனது எதிர்கொள்ளக்கூடிய மானுட வெறுமையுடனும் அபத்தத்துடன் தன் தத்துவத் தியானங்களால் மற்போரிடுவது என்று இவருடைய கவிதைகளைக் கூறலாம். இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை Shadow of the void தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது



2.நிசீம் எசெக்கியேல் (1924-2004), மும்பையில் மராத்தி பேசும் யூத குடும்பத்தில் பிறந்தவர் , தன் கடைசி நாள் சங்கீதங்கள் என்ற தொகுப்பிற்காக சாகித்திய அகதாமி விருதைப் பெற்றவர். ஏ.கே.ராமானுஜன், ஜெயந்த் மஹாபத்ரா போன்றோர் இந்திய கவிதையியக்கத்தில் ஒரு வரிசை என்றால் இவரையும் கல்பற்றா நாராயணன் போன்றோரையும் இன்னொரு வரிசை என்றுசொல்லலாம், மேலே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை ஒரு இணைய இதழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.


3. யாங் வான்-லி (1127- 1206) சீனக் கவிஞர். ஷங் மரபின் நான்கு முக்கியமான கவிஞர்களில் ஒருவர். ஜென் மனோதளத்தில், நிலக்காட்சிகள், சின்னஞ்சிறிய கணங்கள், பயணங்கள் என விரிபவை இவருடைய கவிதைகள். மேற்கண்ட கவிதை, David Hinton மொழிபெயர்த்து தொகுத்த Classical Chinese Poetry: An Anthology எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.
000