லைக்கா
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் மொட்டவிழும் சப்தம் கூட செவியை எட்டும் ராத்திரிப்பொழுது அது. தூரத்தே அகலும் கப்பல்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன், சொல் ஆல கண்டனாக. எப்படியென்று அறியேன், புறப்படும் ஒவ்வொரு கப்பல்களிலும் நானும் இருக்கிறேன். கடலின் ஈரவிழிகளை நேருக்குநேர் பார்த்து நிற்பவனின் கதாபாத்திரத்தில். உன்னிடம் சொல்லவேண்டிய யாவற்றையும், இருண்ட தொடுவானத்தின் தட்டச்சுப்பலகையில் என் பார்வையால் தட்டிக்கொண்டிருப்பவனின் கதாபாத்திரமாகவும். தொலைவினின்று எனக்கு நானே கையசைக்கும் விசித்திரம் போலவும்.
சாளரத்துக்கு அப்பால் அது என்ன? ஒன்று, இரண்டு இல்லை நான்கு நேரங்கெட்ட கடற்பறவைகள். புகைப்படம் எடுக்க முயல்கையில் விருட்டெனப் பறக்கின்றன சமுத்திரத்தை நோக்கி. நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ஒருவழியாக பக்கத்து அறையின் தொலைகாட்சி சப்தம் என்னிடம் வருகிறது. ராக்கெட், நிலவு, விஞ்ஞானிகள், பெருமிதக்கூச்சல்கள் இத்யாதி இத்யாதிகள்... அப்புறம் அலைகளின் ஒயாத குரைப்பொலிகள் மாத்திரமே.
நானோ மெதுமெதுவாக உடுக்கூட்டங்களில் ஆழ்ந்தேன். அதோ அங்குதான் எங்கோ இன்னும் லைக்காவின் எலும்புக்கூடுகள் மிதந்துகொண்டிருக்கின்றன, அறியமுடியாமையின் சமுத்திரத்தில் ஒரு எலும்புப்படகு என. அதோ அங்குதான் லைக்கா தூசித்துகள்களாக, நட்சத்திரத்துகள்களின் மீது மோதி எதிரொலித்து, பூமியின் வஸ்துகள் எதுவும் அறியாத வெண்தனிமையில் பிரயாணம் போய்க்கொண்டிருக்கிறாள். இரு, நானும் வருகிறேன்.
*
Comments
Post a Comment