சாரங்கி சரணாலயம்



சாரங்கி,
உன்னை விட்டால் யார் இருக்கிறார்
என்றாகிவிட்டது இப்போது.
இளஞ்சிவப்பு ஒலித்தொடரே
நீல மெளன அடிவாரமே
வேறு உலகத்தில் உலவவிட்டுச்
சட்டென்று
என்னைப் பறித்துக்கொள்ளும்
உன் சோகத்தின் கருணையை
இருள் என்று
நான் மொழிபெயர்த்துக் கொள்ளட்டுமா?
அருகாமையை நீ தொலைவு என்கிறாய்,
பார்த்ததைப் பார்க்காதது என்றாக்கித் தருகிறாய்,
உள்ளும் புறமும் அறியமுடியாத உன் வார்த்தைகளில்
நான் எப்படிச் சொல்ல முடியும் நன்றி என்று?
எத்தனை எத்தனை சந்திப்புகள் முடிந்திருக்கும் புலன்களின் வீதியில்
உன் பழக்கம் பசுமை தட்டிவிடவில்லையே சாரங்கி
தன்னந்தனியாக
ஒரு மேகத்துண்டு போலவே
நான் கரைந்து கொண்டிருக்கின்றேனே.
சொல் சாரங்கி
நத்தை வேகத்தில்
புயல் அடித்தால்
என்னதான் எஞ்சும்?

Comments