நீயே உனக்குப் புதையல்தான்
![]() |
| Artist: Michael Kraehmer |
யாரால் உறுதியாய் கூறமுடியும்
யாரும் யாரைவிட்டும் போகவில்லை என.
துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே
நீந்திச்செல்கின்றன காரன்னப்பறவைகள்
புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு
இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறது உதயகாலம்
வல்லோனின் மோதிரத்திலிருக்கும்
ரத்தினமென ஜொலிக்கக்காத்திருக்கிறது விடிவெள்ளி
சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும்
மெதுவாக
ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி
பொழுது புலர்ந்துவிட்டாலோ
ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை
வேட்டையாடுபவனைப் போல
நாம் நம்மைத் தேடிச்சென்றாகவேண்டும்
அருமை வாசகரே நீங்கள் தயாரா?
*

Comments
Post a Comment